Kavithaigal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Kavithaigal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

மரத்தின் சாபம்


தென்றலுக்கேற்ப 

இலையும் கிளையும் 

இசைந்து 

அசையும் நிழலில்

தாய் போலத் 

தாலாட்டி தூங்கவைத்த 

மரத்தினை கொன்று 

வேரோடு சாய்த்து 


மலையளவு வீடெழுப்பி

அசையா நிழலில் 

நிம்மதியாய் உறங்க வெண்ணி

தாய் கொண்ட 

கோபத்தின்  அழல் 

தாங்க 

முடியாமற் தவித்து  

வெக்கிப்  புழுக்கந் தாங்காது 

புறத்தை யோடி


புரியாமற் 

பார்க்கையில் 


மரத்தின் உயிர்ப்பான 

நிழலை விட 

சுவரின் உயிரற்ற 

நிழல் எவ்வகைளும் 

ஏற்புடையதல்ல 

என்றுணரும் தருணம் 


மரத்தின் பிடியில் 

வீடே சூன்யமாய் 

மாறியிருக்கும் 


செவ்வாய், 27 டிசம்பர், 2022

முட்டாள்தனம்

 



பல்லாயிரம் பேரின் 

உயிரை எடுத்தோ

அல்லது  

ஊன்று கோலுக்கு 

துணையாக்கியோ 

விட்ட போர் வாளை 

இடுப்பில் வைத்துக் கொண்டு 

பூனைக்கு 

சகுனம் பார்த்த கதையாய் 



புறம் பேசி 

பலரின் வாழ்வை 

நிர்கதியாக்கியவர்களை 

நண்பர்களாய்  யெண்ணி 

முகமுன் 

கோபப்படுபவர்களை 

முதல் எதிரியாய்

பாவித்த 

முட்டாள்தனம் 

போலிருக்கிறது 


வியாழன், 2 ஜூன், 2022

கொலையுண்ட நாய் - குற்றவாளிகள் நாம்

கருத்த நாயின் 

பெருத்த உருவத்தின் 

பின்னங்காலிலிருந்த 

சிதைந்த புண்ணின் 

சீழிலிருந்து 

சீறும் நாற்றம் 


எவரேனும் செய்வர் 

உதவி என 

ஏங்கிய மனதுடனும் 

மங்கிய பார்வையுடனும்

முனகிக்கொண்டே 

வாலை ஆட்டிக்கொண்டு 

வாசல் வாசலாக 

தன் வம்சத்துடன் 

வந்து நின்றது 


வந்தோரெல்லாம் 

செந்தேளிதழ் கொண்டு 

வாயிற் வசை பாடிக் 

கொட்டிச் 

சென்றாரேத் தவிர 

சிறிதேனும் வலியதனை 

உணரவில்லை


அறியா பிள்ளையெனும் 

சிறிய சாத்தான்கள்

அப்புண்ணில் 

தண்ணீர் கொட்டியும் 

மண்ணள்ளி வீசியும் 

விளையாடிய போது 

குரைக்க கூட 

வலுவற்று

குனிந்து சென்றது


குழந்தைகள் திரியும் 

இத்தெருவில் 

வேகமாய் செல்லும் 

வண்டிக்காரர்களை துரத்தும் 

அப்படி துரத்தியோடிய 

யொருவன் திரும்பி 

வந்து செங்கற்க் 

கொண்டு பின்னங்காலில் 

இட்டதன் இடரிது


தோய்ந்து தோய்ந்து 

தெருவின் முதல் வந்து 

நிற்கக்கூட திராணியற்று 

நிலை தடுமாறி 

நீர்தொட்டி யருகை 

வீழ்ந்த பின் 


பின்னங்காலில் ஈக்கள் 

மொய்க்க

நாவால் நக்கி விரட்ட 

முயல முற்பட்டு 

முடியாமற் போக 

சுருண்டு படுத்த 

போது சுயநினைவு 

சூன்யமாகிக் கொண்டிருந்தது  


வலியது பொறுக்காமல் 

ஊளையிட்டதன் 

ஒளி ஊருக்குக்கேடென 

பிள்ளையார் கோவில் 

பூசாரி கூற 

ஊரின் எல்லை

கொண்டு வீசப்பட்டதேயன்றி 

உதவ வில்லை 

யொருவரும் 


இரு நாள் கழித்து 

இறந்து கிடந்த நாயின்  

மடியை கவ்வி 

இழுத்துக்  கொண்டிருந்தன  

இரு குட்டிகள் 


செவ்வாய், 31 மே, 2022

அவளில்லை


தூங்கும் விழி 

தாங்கும் முகம் 

பார்த்து தொண்டைதனை 

யடைக்கும் துக்கம் 

திக்கும் துயர 

நிலை 


கை  பொத்தி 

வாய் மூடியும் 

கண்ணீர் இமையணை 

தாண்டி கால்களில் 

பட்ட சூடுணர்ந்து 


கரங்  கொண்டு 

கண்  தோய்த்து 

அரை தூக்கம் 

கலைந்து அடுப்படி 

தேடுமுன்னிடம் 


அம்மா ?


அவளில்லை நானென்று 

எவ்வாறுரைப்பேன் 

புதன், 18 மே, 2022

வாரா நாட்கள்

 


பள்ளி வருமுன் 

பஞ்சரானது 

புது சைக்கிள் 


வகுப்பு வாசலில் 

தடுக்கி 

விழுந்தேன் 


வந்த பின் 

முதல் பெஞ்சில் 

அமர்த்தப்பட்டேன் 


கரும்பலகை 

அழிக்க 

கட்டளையிடப்பட்டேன் 


அதீத வெயிலால் 

அன்று மதிய 

சோறும் கெட்டது 


பச்சத் தண்ணீரும் 

சூடாக 

உள்ளிறங்கியது 


பசிதூக்கத்தில் 

வீழ்ந்ததால் 

உரைநடை 

உரக்கப் படிக்க

உத்தரவிடப்பட்டேன் 


கடைசி 

பீ.டீ பீரியடும்  

கணக்கு வாத்தியருகே

கடனளிக்கப்பட்டது


இவ்வனைத்து 

துர் சம்பவங்களின் 

துயர காரணம் 


வருகைப் பதிவேட்டில் 

அவள் 

வாரா நாட்களே !


ஞாயிறு, 15 மே, 2022

இரு வார்த்தை



 ஈரிரெண்டு மணி 

நேரங் கழித்து 

ஓரிரு வார்த்தைகளை

மட்டுமே கொட்ட 

முடிந்தது 

முதல் சந்திப்பில்..


முன்னோட்டம் பார்த்த 

வார்த்தைகள் யாவும் 

தொண்டைக்குள் வெட்கி 

சிக்கியதில் வாயிற் 

வாசலில் 

வந்த முதல் 

வார்த்தை 'வாங்க'


தொண்டையினுள் சிக்கிய 

வார்த்தைகளை சுடு 

தேநீர்க் கொண்டு 

சுட்டு விட்டு


சக்தி முழுதும் 

பிரயோகித்து 

தைரிய மனைத்தும் 

கிரகித்து சொல்ல 

வந்த வேளையில் 


நீ சொன்ன 

வார்த்தையின் 

எதிரொலியில்

நான் சொன்ன 

இரண்டாம் வார்த்தை 

'போகலாம்'


சொன்ன 

இரு வார்த்தையும் 

உன்னோடு சேர்த்தால் 

என்னோடு வருவாயா ?

சனி, 14 மே, 2022

பூவும் பேதையும்



புது காலையில் 

பூத்த  மலரை 

மண்டி யிட்டு 

முகர்ந்து பேசிக் 

கொண்டிருந்த பெண் 

பிள்ளையை பின்னுக்குத் 

தள்ளி பிய்த்துத் 

தின்று பேசாமற் 

போன பெட்டை 

ஆட்டிடம் பேச்சு 

வார்த்தைக்கு போக 

பேசும் பொம்மை 

யொன்றை துணைக்கு 

கை  பிடித்து 

அழைத்துக் கொண்டு 

"இனிமே பூ 

சாப்ட்ட சாமி 

கண்ண குத்தும்னு"

அம்மா சொல்வதைப்போல

கண்டிப்பா சொல்லவும் 

அதை புரிந்தார் 

போல் மண்டையாட்டிய 

யாட்டிடம் சம்மதம் 

வாங்கின மகிழ்ச்சியில் 

பூச்செடிக்கு ஆறுதல் 

சொல்ல வந்த 

வேளையில் அப்பா 

அதே செடியில் 

மீதிப் பூக்களை 

பரித்துகொண்டிருந்ததைக்  

கண்டு புரியா 

மொழியில் பொரிந்து 

தள்ளி விட்டு 

வீட்டுக்குள் சென்று 

இறந்து போன 

பூக்களுக்காக 

அழுது கொண்டிருந்தபோது 

அம்மாவிடம் 

"சாமி அப்பா 

கண்ண குத்தாது-ல"

என்றவளை 

புரியாமல் அணைத்துக்கொண்டாள்.


வெள்ளி, 13 மே, 2022

துளிக் கறுமை

 


உதட்டோரம் கசிந்த 

சிரிப்பு நழுவி 

கன்னக் குளத்தில் 

விழுந்ததும் 


சுட்டு விரல் 

கொண்டு கண்ணடி

கறுமைத் தொட்டு 

கலந்ததில் 


பேனா முனைத் 

தொட்டெழுதிய 

எழுத்துக்களுக்கும் 

கிறுக்குப் பிடித்து 


இடமாறி இடறி 

சொல்லும் பொருளும் 

அவளதரமும் அதன் 

நகையுமாகி 

நாம சங்கீர்த்தனமாகியது 


அக்கருமை

கனந்தாங்காது  

காகிதத்துக்கும் 

மயக்கம் வந்து 

கன மேசையடியில் 

கிடத்திய 


பின் 

தரணி 

தலை 

சுற்றியது  

வியாழன், 12 மே, 2022

மஞ்சக்கயிறு


 


குயில்களின் 

கானத்தை 

கையிறாகத்

 திரித்து 


மாலையது 

மதியின் 

மஞ்சளொளில் 

தோய்த்தெடுத்து 


மழலைக் குரல் 

கொண்ட 

மங்கையவள் 

செங்கழுத்தில் 

படரவிட்டு 


காதலென்ற 

மூன்றெழுத்து 

கொண்டு 

முடிந்து 

விட வேண்டும் 

புதன், 11 மே, 2022

சொல்லாளம்

 


சொல்லின் செயல்முன் 

சொல் வந்து 

பல்பட்ட நா 

பதம் பார்த்தது 

நெஞ்சை 

திங்கள், 9 மே, 2022

நொடிப் பொருள்

 


வார்குழலது வாஞ்சையோடு

 கன்னம் தீண்டும்பொழுது

மெல்லச் சிணுங்க 

மேலுதடு சுருங்க 

விழுந்த பள்ளமதில்

 விரலது கடந்து

 செவியோரம் சேர்த்து

 மறைத்த பின் 

நொடியது பாதியில்

இடப்புறம் நோக்கி 

வலக்கண் ஏதும் 

வாள் சுழற்றுதோ 

என்றாய்ந்து நுகர்வோர் 

யாருமில்லா என்றுணர்ந்து

கண்ணோரம் சிறு 

கவிதைபாடி 

கடந்து சென்றதும் 

எம்மனக்கண்

 கண்ட இவ்விளக்கத்திற்கு 

அப்பொருள் தானே ?

பண மரம்



வேகம் 

நிறைந்த 

வயதில் 

ஞாயிறு, 8 மே, 2022

வியாழன், 5 மே, 2022

பிள்ளைக் கனா



 வர்ணங்களை

பிழிந்து 

சாறெடுத்து

அதில் 

மழலைக் கட்டளை

 

காலையில் கதிரவனைப் பார்த்து 
கண்டித்து கொண்டிருந்தாள்..

ஏன் என்று கேட்டேன் ?

செவ்வாய், 3 மே, 2022

குளிர்க் கூந்தல்

 


குளித்த 

கூந்தல் 

குளிருக்கு 

நடுங்கிற்று 

வேகங் 

கொண்ட 

விசிறியால் ...

ஞாயிறு, 20 ஜூன், 2021

விபச்சா(ஏ)ரி


பலவருட நீர்வற்றா

ஏரியை வளைத்துப் பிடித்து

வண்டி வைத்து

திங்கள், 2 நவம்பர், 2020

நினைவு 1

 நினைவுகளின் போர்வைக்குள்

தூங்கவே

மனது விரும்புகிறது..

வெள்ளி, 30 அக்டோபர், 2020

முதிர்ச்சி

காதலின் முதிர்ச்சி

கண்களில் தெரியும்

வார்த்தைகள் குறையும்

மெளனமும் நிரம்பி வழியும்…