ஞாயிறு, 21 மே, 2023

மௌனக் கிணறு

 எப்பொழுதும் 

நீ பேசும் 

அன்பான 

மௌனங்களை எல்லாம் 

ஒரு கிணற்றில் கொட்டி 

நிரப்பி விட்டாலென்ன? 


ஏனெனில் 

எப்பொழுதாவது 

நீ பேசா 

சுடு சொற்களை

 

அம்மௌனக்  கிணற்றிலிருந்து 

வாளி இரைத்து 

தனித்துக் கொள்வேன் 

அன்பெனும் குற்றம்

அன்பென்பது அனுதினமும் 

வீசும் கடலலை போல 

அதை 

பெரிதாக பொருட்படுத்துவதேயில்லை 


ஆனால் 

எப்பொழுது கவனத்திற்கும் 

எதிர்பார்ப்புகளுக்கும் 

உள்ளாக்கப்படுகிறதோ 


அப்பொழுது 

நடு 

இரவினில் வந்து 

கடல் அலைகள் 

சுடவில்லை எனவும் 


நன் 

பகலினில் வந்து 

குளிரவில்லை எனவும் 

சொல்வது போலாகும்

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

மரத்தின் சாபம்


தென்றலுக்கேற்ப 

இலையும் கிளையும் 

இசைந்து 

அசையும் நிழலில்

தாய் போலத் 

தாலாட்டி தூங்கவைத்த 

மரத்தினை கொன்று 

வேரோடு சாய்த்து 


மலையளவு வீடெழுப்பி

அசையா நிழலில் 

நிம்மதியாய் உறங்க வெண்ணி

தாய் கொண்ட 

கோபத்தின்  அழல் 

தாங்க 

முடியாமற் தவித்து  

வெக்கிப்  புழுக்கந் தாங்காது 

புறத்தை யோடி


புரியாமற் 

பார்க்கையில் 


மரத்தின் உயிர்ப்பான 

நிழலை விட 

சுவரின் உயிரற்ற 

நிழல் எவ்வகைளும் 

ஏற்புடையதல்ல 

என்றுணரும் தருணம் 


மரத்தின் பிடியில் 

வீடே சூன்யமாய் 

மாறியிருக்கும்